ஸ்ரீலங்காவில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் போது பாடசாலை வளவுக்குள் மாணவர்கள் குழுக்களாக இணைதலை தடுக்கும் வகையில் இடைவேளை நேரத்தை பல தடவைகளாக ஏற்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்களை கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு வழங்கியுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஒவ்வொரு மாணவரும் வகுப்பறைக்குள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
பாடசாலை ஆரம்பிக்கும் போதோ அல்லது முடிவடையும் போதோ மாணவர்கள் ஒன்று கூடுதல் மற்றும் குழுக்களாக இணைந்து பேசுவது ஆகியவற்றுக்கு இடமளிக்க வேண்டாம்.
மாணவர்களுக்கிடையிலான இடைவெளியை ஒரு மீற்றர் தூரமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கேற்றவாறு மேசை மற்றும் கதிரைகளை ஏற்பாடு செய்யவும் வகுப்புக்களின் இடவசதிக்கமைய மாணவர் எண்ணிக்கையை அனுமதிக்க வேண்டும்.
பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு மற்றும் பல் சிகிச்சை நிலையங்களை திறப்பதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறும் கூட்டங்கள், ஒருவரை ஒருவர் தொடுதல் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கள், கல்விச் சுற்றுலா போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிக அவசியமாக தேவைப்படும் பட்சத்தில் மட்டும் பாடசாலை நிர்வாகத்தினர் கூட்டங்களை நடத்த முடியும்.
எந்த சந்தர்ப்பத்திலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் பாடசாலை வாயில்களில் கூடுவதை தடை செய்யுமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
0 Comments