கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக கூறி அவர்களின் வாக்கை பெற்று நாடாளுமன்றம் செல்கின்றவர்கள் அந்த மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்காமல் பாராளுமன்றத்தில் தூங்குகின்றனரென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி வொய்ஸ் ஒப் மீடியா அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
இதுவரை காலமும் தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் நல்லிணக்க மற்றும் இந்தக் கலாச்சார அமைச்சில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய நான் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் ஒரு வேட்பாளராக களமிறங்கியுள்ளேன்.
கடந்த காலங்களில் எமது மாவட்டத்தில் நிலவிய பல்வேறு குறைபாடுகளை இனங்கண்டு என்னால் முடிந்தளவு அந்த காரியங்களை நிறைவேற்றியுள்ளேன்.
இங்குள்ள பல்வேறு பிரச்சினைகள் காணிப் பிரச்சினையும் சரி அதேபோல் வேறு வேறு பிரச்சினைகளில் முகங்கொடுப்பதற்குரிய சரியான அரசியல் தலைமைத்துவம் இங்கு காணப்படவில்லை என்பதற்காக தான் இன்று பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ளன.
கடந்த காலங்களில் இவர்கள் எங்கிருந்தார்கள் என்பதே மக்களின் கேள்வியாகும் நான் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை. அரசியலுக்கு வருவது அரசியலில் இருந்து விடுபடுவது அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து.
அதேபோல் அவர்களுக்கு வாக்களிப்பது வாக்களிக்காமல் விடுவது அது மக்களின் உரிமை.
கடந்த காலங்களில் பல கிராமங்களுக்கு சென்ற வேளை என்னிடம் கூறிய ஒரே கருத்து பல கட்சிகள் வந்தன. பல வேட்பாளர்கள் வந்தார்கள். பல தசாப்த காலங்களாக பலரை ஆதரித்துள்ளோம். ஆனால் எவருமே தேர்தல் முடிந்தபிறகு அவர்களை அடுத்த தேர்தல் வரும் வரையிலான 5 வருடத்தில் காணமுடியவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்கைப் பெற்று குறைந்தது மூன்று பேர் நாடாளுமன்றம் செல்கின்றார்கள். ஆகவே இந்த மக்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கோ தீர்ப்பதற்க்கோ அதிகாரமானது அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதிகாரத்தைப் பெற்றவர்கள் தூங்கினால் அல்லது செய்றபடாமல் விட்டால் அந்த சமூகம் அல்லது அந்த இனம் பாரிய விளைவை நோக்கிச் செல்லுமென அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments