இலங்கையில் சுமார் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆதி மனிதர்கள் மிருகங்களின் எலும்புகளில் வடிவமைக்கப்பட்ட கருவிகள் கிடைத்துள்ளன.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான “ஒசான் வெடகே” சர்வதேச ஊடகம் ஒன்றிடம் இதனைக் குறிப்பிட்டார்.
ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு வெளியில் இவ்வாறான சான்றுகள் முதன்முறையாக இலங்கையிலேயே கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மிருகங்களின் எலும்புகளில் தயாரிக்கப்பட்ட வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி, மிருகங்களை வேட்டையாடியமைக்கான ஆதாரங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் போதுமான ஆய்வு வசதிகள் இல்லாமையை அடுத்து அகழ்வுப் பணிகளின் போது பெற்றுகொள்ளப்பட்ட தொல்பொருள்கள் ஆய்விற்காக ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.
இந்த ஆய்வுகளின் ஊடாகவே பல தொல்பொருள் பெறுமதி வாய்ந்த பழமை அடையாளங்கள் குறித்து தகவல் அறிய முடிந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
மிருகங்களின் எலும்புகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட வில் மற்றும் அம்புகள் இவற்றில் காணப்பட்டதாக மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி நிலையத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க யுகத்திலிருந்து மனிதர்கள் வெளியில் வருகை தந்த பின்னர் தயாரிக்கப்பட்ட வில் மற்றும் அம்புகள் இவை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் சுமார் 48,000 வருடங்களுக்கு முன்னர் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு மிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளமை இந்த ஆய்வின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெடகே கூறினார்.
குறிப்பாக ஈர வலயக் காடுகள் (மழைக் காடுகள்) அமைந்துள்ள பகுதிகளிலேயே ஆதிவாசிகள் இந்த தொழில்நுட்பத்தின் ஊடாக தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்துள்ளதாக நம்ப முடிகின்றது எனவும் அவர் தெரிவித்தார்
இந்த ஆயுதங்களின் ஊடாக அந்த மனிதர்கள் சிறு மற்றும் மத்திய அளவிலான மிருகங்களையே வேட்டையாடியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் வேறொரு பகுதியில் மிருகங்களின் எலும்புகளைப் பயன்படுத்தி வேட்டையாடிய மிக பழமையாக சந்தர்ப்பம் இதுவென அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒசான் வெடகே கூறினார்.
இலங்கையில் இயற்கையுடன் இணைந்ததாக மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் இதன் ஊடாக கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
இதுவொரு ஆரம்பம் மாத்திரமே என கூறிய அவர், எதிர்காலத்தில் இந்த விடயம் தொடர்பில் மேலும் பல ஆய்வுகளை நடத்த வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முடியுமானளவு ஆய்வுகளை நடத்த வேண்டும் எனவும், அதனூடாக பல பெறுபேறுகளை பெற்றுகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தமது அர்ப்பணிப்பினால் பெறுபேறுகளை இயலுமான அளவு விரைவில் பெற்றுகொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
அத்துடன், இலங்கையில் ஆதி மனிதர் சுமார் 50,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தமைக்கான சான்றுகள் தற்போது உறுதியாகியுள்ளமையும் பெறுமதியான ஒரு விடயம் என அவர் குறிப்பிடுகின்றார்.
0 Comments